பாதுகாப்பு செயலாளர் கமல் உறுதியளிப்பு
இலங்கை மற்றும் பிரிட்டனுக்கிடையில் நிலவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்தும் வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குனரட்ண உறுதியளித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடைமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் டேவிட் அஷ்மான், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ணவை சந்தித்தார். இதன் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு (08)செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றதோடு இதில் , புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள கேர்ணல் போல் கிளேட்டனும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக கேர்ணல் அஷ்மான் பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவித்தார். பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகரின் சேவையை, பாதுகாப்பு செயலாளர் பாராட்டியதுடன், அவரது எதிர்கால செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தனது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்தும் வழங்குவதாக உறுதியளித்த பாதுகாப்பு செயலாளர், புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள கேர்ணல் கிளேட்டனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகருக்கு அவரின் சேவையைப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றையும் பாதுகாப்பு செயலாளர் இந்த சந்திப்பின்போது வழங்கினார்.
from tkn