- கரையொதுங்கிய சடலங்களுடன் தொடர்பு?
இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரமொன்று வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை கரையொதுங்கியது.
தமிழகத்தின் ஆலம்பத்தூர், சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் (47) என்பவரின் சாரதி அனுமதிப்பத்திரமே இவ்வாறு கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வடபகுதிக் கடலில் ஆறு நாட்களிற்குள் இனந்தெரியாத ஆறு சடலங்கள் கரையொதுங்கின. கடந்த மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் இரு சடலங்களும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் ஒரு சடலமும், கடந்த வியாழக்கிழமை (02) பருத்தித்துறை சாக்கோட்டை மற்றும் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியிலுமாக இதுவரை 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
குறித்த 06 சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
(நாகர்கோவில் விஷேட நிருபர்)
from tkn