தண்டப்பணம் அறவிடும் முறைகளில் மாற்றம்

"SPOT PAID" எனும் முறை அறிமுகம்

வாகனங்கள் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் தண்டப்பணம் அறவிடும் செயற்பாடுகளை தொழில்நுட்பமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அநேகமான சந்தர்ப்பங்களில் தண்டப்பணம் செலுத்தி தனது வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்கின்றன. அதனால், “SPOT PAID” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த முறையின் மூலம் தண்டப்பணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பத்திலேயே தமது கடன்அட்டை அல்லது வேறு முறையில் தண்டப்பணத்தை செலுத்திவிட்டு வாகன அனுமதிப்பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய முறையை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று, தவறிழைக்கப்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் நடைமுறையும் இருக்கிறது. கடந்த 10 வருடங்கள் வீதி விபத்துகளினால் 27,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துகளில் 2,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், போதைப்பொருட்களுடன் வாகனங்களை செலுத்துதல், அதிவேகமாக வாகனங்களில் பயணித்தல் போன்ற காரணங்களினால் இந்த விபத்துகள் இடம்பெறுகின்றன.

சாரதியொருவர் தவறிழைக்கும்போது அவரது வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்தால் ஓரளவு விபத்துகளை குறைத்துக்கொள்ள கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

Fri, 12/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை