TNA எம்.பிமாருக்கு எதிராக புலம்பெயர் தமிழர் போர்கொடி

சுமந்திரன், சாணக்கியனுக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வொன்றுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.

கனடாவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் டொரொண்டோவில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்தில் உரையாற்றும்போது மண்டபத்தினுள் பிரவேசித்த எதிர்ப்பாளர்கள் கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.

அத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒத்த கொடிகளைச் சுமந்தவாறு மண்டபத்திற்கு வெளியே ஆர்பாட்டத்தையும் முன்னெடுத்தனர்.

தங்களுக்கு அரசியல் தீர்வுத் தேவை இல்லை என்றும் தனித் தமிழீழமே தீர்வாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, 45 நிமிடம் தாமதமாகி குறைவான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது,கூட்டத்தில் மக்கள் தமது கேள்விகளை வாய்மொழியாக கேட்க முற்பட்ட போது அதனை எழுத்துமூலமாக எழுதி தருமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளிலிருந்தும் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் தம்மால் எழுத்துமூலமாக கேள்விகளை வினவ முடியாதென தெரிவித்த நிலையில், வாய்மொழியாக கேள்விகளை கேட்க பின்னர் ஏற்பாட்டாளர்கள் அனுமதித்துள்ளதுடன், குறைந்தளவிலான மக்கள் பங்குபற்றுதலுடன் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்திற்குள் நுழைந்து சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை அங்கிருந்து வெளியேறுமாறு குழப்பத்தில் ஈடுபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மண்டபத்திலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளதுடன், மண்டபத்தினை ஆர்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதுடன் கூட்டம் பதற்றமான சூழ்நிலையில் இடம்பெற்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள மக்களுக்கு ஆதரவாளராக செயற்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தினர். ஏற்கனவே சுமந்திரன் இவ்வாறு வெளிநாடுகளில் கலந்துகொண்ட பல நிகழ்வுகளில் இவ்வாறான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.

 

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை