டிஜிட்டல் வாழ்க்கைத் தர சேவைகளை மேம்படுத்தும் eChannelling நடவடிக்கை

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட முன்னணி தொழில்நுட்ப சார் நிறுவனங்களில் ஒன்று

இலங்கையின் மாபெரும் டிஜிட்டல் சேவைகளுக்கான முன்பதிவுச் சேவைகளை வழங்கும் நிறுவனமான eChannelling PLC, தேசத்தின் எதிர்கால டிஜிட்டல் வாழ்க்கை முறை மேம்பாட்டுக்காக விரிவாக்கத் திட்டங்கள், பங்காண்மைகள் மற்றும் தயாரிப்பு புத்தாக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டு இயங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. SLT-MOBITEL நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கும் eChannelling PLC, நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்ததுடன், அதனூடாக எதிர்கால வளர்ச்சி மற்றும் தந்திரோபாய ரீதியிலான வர்த்தக நாம மீள அறிமுகத்துக்கு உறுதியான அடித்தளத்தை வடிவமைத்துக் கொண்டுள்ளது.

eChannelling, 2021, செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ. 47 மில்லியன் வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 17 சதவீத அதிகரிப்பாகும். முதல் ஒன்பது மாத காலப் பகுதிக்கான வருமானம் ரூ. 134 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், 2020 ஆம் ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 41 சதவீத அதிகரிப்பாகும்.

நிறுவனத்தின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 16 மில்லியனாக பதிவாகியிருந்தது.

முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீத வளர்ச்சியாகும்.

நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் நிறுவனத்தின் இலாபத்தன்மை 116 சதவீதம் உயர்ந்து, ரூ. 43 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2020 ஆம் ஆண்டின் இதே காலப் பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 20 மில்லியனாகும். eChannelling இன் தந்திரோபாய மாற்றங்கள், திரண்ட சேவைகள் போன்றவற்றினூடாக வளர்ச்சியை பதிவு செய்யும் ஆற்றல் உறுதியான மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகளினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய வருமான வழிகளை கட்டியெழுப்பவும் ஏதுவாக அமைந்துள்ளது.

சுகாதார பராமரிப்பு சேவைகள் பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த ஆண்டில், நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்து, சகல பங்காளர்களுக்கும் பெறுமதியை உருவாக்கும் வகையில் செயலாற்றியிருந்தது.

SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “மொபிடெல் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனும் வகையில், eChannelling PLC நிறுவனம், தேசத்தின் டிஜிட்டல் கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தன்னை தயார்படுத்தியுள்ளது. நவீன தீர்வுகள் மற்றும் உயர் சேவை வழங்கல்களினூடாக டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவைகளில் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தல்களை ஏற்படுத்தி இந்த மாற்றத்துக்கு வழிகோலவுள்ளது.

மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையிலமைந்த சேவைகளை வழங்குவதில் இரு தசாப்த கால பூர்த்தியை கொண்டாடும் eChannelling PLC, எதிர்காலமும் சிறப்பானதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கின்றது. eChannelling இன் நவீன தீர்வுகளுக்கு SLT-MOBITEL இன் தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் போன்றன பெருமளவு பங்களிப்பை வழங்குவதுடன், நாட்டின் சுகாதார பராமரிப்பு சேவைகள் மற்றும் இதர தொடர்புடைய சேவை நியமங்களின் வளர்ச்சிக்கு அதிகளவு பங்காற்றுகின்றன” என்றார்.

இரு தசாப்த காலமாக டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு சேவைகளில் eChannelling இன் மாற்றியமைக்கும் பயணத்தினூடாக, தந்திரோபாய பங்காண்மைகள் மற்றும் புத்தாக்கமான சேவை வழங்கல்களினூடாக அதிகளவு நாடப்படும் டிஜிட்டல் வாழ்க்கைத் தர சேவைகள் வழங்குநராக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் வாழ்க்கைத் தர சேவைகளில் eChannelling இன் அண்மைய விரிவாக்க செயற்பாடுகளினூடாக, தனது சேவை வழங்கல்களை பன்முகப்படுத்த முடிந்திருந்ததுடன், ஒப்பற்ற வாடிக்கையாளர் தன்னிறைவையும் வழங்கி, தொழிற்துறையில் புதிய நியமங்களை பதிவு செய்ய முடிந்துள்ளது.

ரொஹான் பெர்னான்டோ மேலும் தெரிவிக்கையில், “அண்மைய மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகளினூடாக டிஜிட்டல் சேவைகளை மாற்றியமைப்பதில் eChannelling இன் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாடுகள் சுகாதார பராமரிப்புத் துறைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைவருக்கும் அணுகக் கூடிய வகையில் விரிவாக்கமடைவதை காண முடிகின்றது. தந்திரோபாய அடிப்படையிலான வர்த்தக நாம வழிகாட்டல் என்பது அதிகளவு அளவிடக் கூடிய மற்றும் துரித வளர்ச்சியை வியாபாரங்களுக்கு வழங்கும் என்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், உறுதியான தந்திரோபாயத் திட்டத்தினூடாக 2022 ஆம் ஆண்டு, eChannelling PLC க்கு விறுவிறுப்பான ஆண்டாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.​

2021 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று நிறுவனம் மொத்த சொத்துக்கள் வளர்ச்சியாக ரூ. 49 மில்லியனை எய்தியிருந்தது. இது 2020 டிசம்பர் 31ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் 12 சதவீத வளர்ச்சியாகும். 2020 டிசம்பர் 31ஆம் திகதி காணப்பட்ட ரூ. 392 மில்லியன் என்பதுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 441 மில்லியனை எய்துவதாக அமைந்திருந்தது. சுகாதார பராமரிப்புத் துறையில் பரிபூரண e-வணிக சேவைகளை வழங்கும் முதலாவது நிறுவனமாக eChannelling PLC திகழ்வதுடன், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட முதல் தொழில்நுட்ப சார் நிறுவனங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

Fri, 11/26/2021 - 09:08


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை