வைபவங்களில் பங்குபற்றும்போது அவதானமாக செயற்படுங்கள்

நாட்டை மீண்டும் முடக்க இடமளிக்க வேண்டாம் என்கிறார் Dr.ஹேமந்த

திருமண, மரண சடங்கு மற்றும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போதும் அவதானமாக செயற்படவும் கோரிக்கை

 

தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கிறோமா என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க  முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதும் நாளாந்தம் சுமார் 500ஐ அண்மித்தளவில் கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே நாம் இன்னும் அபாய கட்டத்திலேயே இருக்கிறோம் என்பது இதனூடாக தெளிவாகிறது.

இந்த நிலைமைக்கு மத்தியில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வீதமும் மந்தமடைந்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவங்கள், மரண சடங்குகள், உற்சவங்கள், மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவது தெளிவாகிறது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை