உலக நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

உலக நாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்-Gotabaya-Rajapaksa-COP26

வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாட்டு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகின்ற COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் ஜனாதிபதி, நேற்று முன்தினம் (02) மேற்கண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கை மற்றும் பஹ்ரேன் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதிக்கும் பஹ்ரேன் இளவரசரும் பிரதமருமான சல்மான் பீன்ஹமாட் கலீபா (Salman Bin Hamad Alkhalifa) க்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. வீட்டுப் பணிப்பெண் தொழிலுக்குப் பதிலாக தொழில் திறன்களையுடைய இலங்கையர்களுக்கு பஹ்ரேன் நாட்டில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு துறைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் நேபாளத்துக்குமிடையில் வாரத்தில் நான்கு நாட்களுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை மேற்கொள்ளப்படுகிறது. அந்த விமானப் பயண எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் இருநாடுகளுக்குமிடையிலான சுற்றுலா மற்றும் கல்வித்துறைகளின் மேம்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதிக்கும் நேபாளப் பிரதமர் பகதூர்தெவ்பா (Sher Bahadur Deuba) க்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்ரிஷியாஸ் கொட்லாண்ட் (Patricia Scotland) அம்மையாருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று, கிளாஸ்கோவின் மேர்சன்ட் மாளிகையில் நடைபெற்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் சந்தைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, ஜனாதிபதியிடம் பெட்ரிஷியா அம்மையார் தெரிவித்தார்.

இளவரசர் சார்ள்ஸ், உக்ரேன் நாட்டின் ஜனாதிபதி வ்ளாட்மிர் செலென்ஸ்கி (Veldymyr Zelensky), அவர்கள், உலக வர்த்தக அமைப்பின் பணிப்பாளர் நாயகம், நகோஸி ஒக்கொன்ஜோ அம்மையார் (Ngozi Okonjo) மற்றும் மத்திய கிழக்கு, மேற்கத்தேய நாடுகளின் அரச தலைவர்களையும் அரச பிரதநிதிகளையும் சந்தித்த ஜனாதிபதி, இலங்கையின் சுற்றுலா, பொருளாதாரம் உள்ளிட்ட பலதுறைகள் பற்றி கலந்துரையாடினார்.

வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் இக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டிருந்தனர்.

Thu, 11/04/2021 - 07:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை