இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்துக்கான இந்திய இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் ஆதரவுடன் நேற்று (12) பாராளுமன்ற வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்காக, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த அங்குரார்ப்பண கூட்டத்தில் பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிகளவான பிரதிநிதிகள் கலந்து கொண்டிருப்பதை இங்கு காணக்கூடியதாக இருந்ததாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த உரையாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்திய இலங்கை இருதரப்பு உறவின் பலத்தை நிரூபிக்கும் சாட்சியமாக இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அமர்வின் போது நீர்ப்பாசன அமைச்சர், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சரான சமல் ராஜபக்ஷ இச்சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கலாநிதி வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த சங்கத்தின் துணைத் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
அனுர பிரியதர்ஷன யாப்பா எம்பி, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் முறையே, செயலாளராகவும் துணைச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் ஜகத் குமார சுமித்ராஆராச்சி எம்பி இந்த அமைப்பின் பொருளாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களுக்கு உயர் ஸ்தானிகர், தனது உரையின்போது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்து மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லாவினால் அனுப்பப்பட்டிருந்த செய்தியின் சுருக்கத்தையும் உயர் ஸ்தானிகர் இங்கு வாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
from tkn