நாட்டின் எல்லைகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள்
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டு ஐரோப்பிய நாடுகளெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் புதிய ஒமிக்ரோன் கொரோனா திரிபு இலங்கைக்குள் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் நபர்களின் ஊடாக இந்த புதிய திரிபு வைரஸ் தொற்று நாட்டில் பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதனைக் கவனத்திற் கொண்டு நாட்டின் எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் மேற்படி திரிபு வைரஸ் நாட்டிற்குள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் சுகாதார வழிகாட்டல்
களை முறையாக பின்பற்றுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சங்கத்தின் முக்கியஸ்தரான டாக்டர் பிரசாத் கொழம்பகே,
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா திரிபு வைரஸ் மிக பயங்கரமான வைரஸாகும். அந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளெங்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
அதனால் பல்வேறு நாடுகள் தமது நாட்டு எல்லைகளை பாதுகாப்பதற்கான பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அரசாங்கம் கடந்த காலங்களில் பெற்றுக் கொண்டுள்ள அனுபவத்துடன் உடனடியாக நாட்டின் எல்லைகள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
அத்துடன் நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனை மற்றும் என்டிஜன் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn