பதுளை, - பசறை மற்றும் கேகாலை, -அரநாயக்க பிரதேசங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இந்நிலையில் மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் பிரதேசவாசிகள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்ப்பதாகவும், தொடர் மழை காரணமாக கலா வெவ மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக லக்சபான, விக்டோரியா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. எனவே தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
from tkn