செய்யாத குற்றத்திற்கு 42 ஆண்டு சிறை அனுபவித்தவர் விடுதலை

அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் 1978 இல் மூன்று கொலைகள் செய்ததாக தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு 42 ஆண்டுகளுக்கு மேல் சிறை அனுபவித்த ஆடவர் ஒருவர் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

62 வயது கெவின் ஸ்ட்ரிக்லான்ட், 18 வயதில் கைது செய்யப்பட்டது தொடக்கம் குற்றமற்றவர் என்று கூறி வருகிறார். அவருக்கு 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கன்சாஸ் நகரில் இருக்கும் வீடு ஒன்றை கொள்ளையடித்தது தொடர்பிலேயே அவர் குற்றங்காணப்பட்டிருந்தார். 15,487 நாட்கள் சிறை அனுபவித்த நிலையில் அவரை உடன் விடுவிக்கும்படி நீதிபதி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

“இந்த நாள் வரும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று தனது விடுதலைக்கு பின் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து ஸ்ட்ரிக்லான்ட் கூறினார்.

மிசூரி வரலாற்றில் தவறான குற்றத்திற்கு நீண்டகாலம் சிறை அனுபவித்தவராக அவர் பதிவானபோதும், அந்த மாநில சட்டத்தின்படி அவருக்கு நிதி இழப்பீடுகள் பெற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 11/25/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை