ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூஜை நாடு முழுவதும் அனுஷ்டிக்க அரசாங்கம் ஏற்பாடு

வடக்கு , கிழக்கு, மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சைவத் தமிழர்களுக்கென்று ஒரு மதிப்புமிகு அடையாளம் தந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான். பல்துறை ஆளுமை மிக்க தீர்க்கதரிசனப் பார்வை கொண்ட பெருமகனார் நமக்காகச் செய்த அரும்பணி சைவத் தமிழுலகம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாது.

இத்தகு பெருமை மிகு பெருமானின் 142 ஆவது குருபூஜை நன்நாளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நாடு முழுவதும் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழாவும் குருபூஜையும் சேர்ந்த நிகழ்வாக, இன்று 27 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 9.30 மணிக்கு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், அகில இலங்கை இந்துமாமன்றம், இந்து வித்தியா விருத்திச் சங்கம், இலங்கை சைவ நெறிக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் - இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, கொழும்பு - பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலும் இன்று 27 சனிக்கிழமை, காலை 8.00 மணிக்கு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை நிகழ்வும் நடைபெறவுள்ளது.

 

 

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை