O/L எழுதிய 207 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்

அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும்

பரீட்சை முறைகேடு தொடர்பில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு ஒருவர் பரீட்சைக்கு தோற்றியது தொடர்பாக 6 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், கையெழுத்து மாற்றம், விடைத்தாள், கையடக்க தொலைபேசிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பரீட்சை முறைகேடுகள் தொடர்பாக, பரீட்சைத் திணைக்களத்திற்கு 4,174 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன், அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 3,967 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பரீட்சார்த்திகளிடம் தனியான விசாரணை நடாத்தி மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித நேற்று முன்தினம் (28) தெரிவித்தார்.

இதேவேளை, பெறுபேறு மீளாய்வு தொடர்பான விண்ணப்ப கோரிக்கை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Fri, 10/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை