புலம்பெயர் தமிழர்களை மீளவும் நாட்டுக்கு அழைப்பதே இலக்கு

இந்திய வெளிவிவகார செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

யாழ். கோட்டையை புலிகளிடமிருந்து மீட்ட தனது அனுபவத்தையும் ஜனாதிபதி பகிர்ந்துகொண்டார்

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எடுத்துரைத்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று (05), ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியமென்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக அடையாளம் காண்பதுடன், மீனவச் சமுதாயத்துக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து, இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லையென்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலும், இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய இந்திய வெளிவிவகாரச் செயலாளர், கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கு இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நீண்ட நேர தெளிவுபடுத்தல் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இரு நாடுகளுக்குமிடையிலான கருத்துக்கள் சமனாக இருப்பதால், இரு நாடுகளுக்குமிடையிலான நட்புணர்வைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமென்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை