சகிப்புத் தன்மைக்கு நபிகளாரை முன்மாதிரியாக கொள்வோம்

Rauff Hakeem-Meelad-Un-Nabi Greeting

- மீலாதுன் நபி செய்தியில் ரவூப் ஹக்கீம் எம்.பி

நெருக்கடியான கால காலகட்டங்களில் இறை நம்பிக்கையுடனும், சகிப்புத் தன்மையுடனும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதற்கு நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) முன்மாதிரியாகத் திகழ்ந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்களால் வாழ்வின் சகல துறைகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றார். இறை வேதமான அல் குர்ஆனுக்கு அடுத்ததாக முஸ்லிம்களின் மூலாதாரமாக நபிகளாரின் வழிமுறையே விளங்குகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை,நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாம் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றோம்.பொதுவாக மக்களின் இயல்பு வாழ்க்கை பல விதங்களிலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அல் குர்ஆனின் போதனைகளும், நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியுமே அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வாக அமையும் என்பதில் நாமனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

தீய சக்திகளால் நமது ஈமானிய சமுதாயத்தை நோக்கி விடுக்கப்படுக்கின்ற அச்சுறுத்தல்களை ஆன்மிக பலத்தைக் கொண்டு வெற்றிகரமாக முறியடித்து ஈருலகிலும் விமோசனம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

அல் குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில், பல்லின மக்கள் வாழ்கின்ற நாடொ ன்றில் நல்லிணக்கத்துடனும், புரிந்துணர்வுடனும் செயற்படுவது இன்றியமையாதது.

உலகளாவிய ரீதியில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்லாத்திற்கு எதிரான சதி முயற்சிகளை எமது ஒற்றுமையின் பலத்தினால் முறியடிப்பதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.

Tue, 10/19/2021 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை