கொழும்பு, வெள்ளவத்தையில் சமீப தினங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தி வருகின்றனர். வெள்ளவத்தையின் ஒவ்வொரு வீதியிலும் செறிவாக அமைந்துள்ள தொடர்மாடி வீடுகள் ஒவ்வொன்றுக்கும் செல்லும் பொலிசார், அங்குள்ள வீடுகளில் வசிப்போரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவரை கீழ்த்தளத்துக்கு அழைத்து கருத்தரங்கு வைத்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
வெள்ளவத்தையின் சில தொடர்மாடிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் சமீப தினங்களாக இரவு நேரத்தில் திருடர்களின் கைவரிசை அதிகரித்திருப்பதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். இரவு நேரத்தில் வீட்டின் கதவுகள் மற்றும் யன்னல்களை பூட்டி வைத்து விட்டு உறங்குமாறும், சந்தேகத்துக்கிடமான எவரேனும் நடமாடினால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தருமாறும் மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இதற்கென பொலிசார் தங்களது விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டை மக்களுக்கு வழங்கியுள்ளனர். மக்கள் அழைப்பை ஏற்படுத்தினால் தாங்கள் உடனடியாக ஸ்தலத்துக்கு வரத் தயாராக இருப்பதாக பொலிசார் கூறியுள்ளனர். தொடர்மாடியில் குடியிருப்போர் தங்களது அயல்வீட்டாரின் பாதுகாப்பு குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். யாராவது நடமாடினால் அனைத்து வீட்டாருக்கும் தகவல் கொடுத்து எச்சரிக்கையை ஏற்படுத்தி விடுவதன் மூலம் திருடர்களின் திட்டத்தை முறியடிக்க முடியும்.
சி.சி.ரி.வி கமராவை எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தொடர்மாடி பாதுகாப்பு ஊழியர்கள் மிகவும் அவதானமாக கடமையாற்ற வேண்டும். திருடர்கள் 'எஸ் லோன்' குழாய் வழியாக மேலே ஏறி குளியலறை யன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பணம், நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வேண்டும். பொலிசார் எந்நேரமும் பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளனர்.
இவ்வாறு தொடர்மாடி வீடுகளில் குடியிருப்போருக்கு பொலிசார் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
from tkn