பிரேசில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு செனட் ஆதரவு

கொரோனா வைரஸ் தொற்றை மோசமாக கையாண்டது தொடர்பில் பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு ஆதரவாக அந்நாட்டு செனட்டர்கள் வாக்களித்துள்ளனர்.

கெரோனா வைரஸினால் பிரேசிலில் 600,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டது உட்பட பொல்சொனாரோவுக்கு எதிராக குற்றம் சுமத்தும் அறிக்கை ஒன்றுக்கு செனட் குழு ஒன்று ஆதரவை வெளியிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கை பொல்சொனாரோ நியமித்த தலைமை வழக்குத் தொடுநருக்கு அனுப்பப்படவுள்ளது.

தம்மீதான குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாதவை என்று தொடர்ந்து ஜனாதிபதி கூறிவந்தபோதும், நாட்டில் அவரது செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றினால் உலகில் அதிக உயிரிழப்பு பதிவான நாடுகள் வரிசையில் பிரேசில், அமெரிக்காவுக்கு மாத்திரமே இரண்டாவதாக உள்ளது.

இந்த வாக்கெடுப்பால் பொல்சொனாரோ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த பரிந்துரை பிரேசில் ஜனாதிபதி பொல்சொனாரோவால் நியமிக்கப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்யப்படும்.

மந்தை எதிர்ப்பு சக்தியை அடையும் நம்பிக்கையில் கொரோனா தொற்றை நாடு முழுக்க பரவ விடும் கொள்கையை பொல்சொனாரோ அரசு கடைபிடித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்தது மட்டுமல்லாமல், பொல்சொனாரோ மீது செனட் குழு மேலும் எட்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. குற்றத்தைத் தூண்டியது, ஆவணங்களை போலியாக மாற்றியது, சமூக உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று பொல்சொனாரோ பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பெருந்தொற்று குறித்து தவறான தகவல்களை பரப்பியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த 1,300 பக்க அறிக்கையில் பொல்சொனாரோவின் மூன்று மகன்கள் உட்பட மேலும் 77 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரேசில் அரசின் ஊழல்கள் குறித்து நடந்து வந்த ஆறு மாத கால விசாரணை இந்த வாக்கெடுப்பு மூலம் முடிவுற்றது.

இந்த விசாரணை காலம் முழுவதுமே பொல்சொனாரோ, பெருந்தொற்று காலத்தின் ஆரம்பப் புள்ளியிலிருந்து தனது அரசு முறையாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் பொல்சொனாரோவின் அரசியல் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் இதனை அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளனர்.

பொல்சொனாரோ குற்றம் புரிந்தார் என்று நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ அவர் கொரோனா பெருந்தொற்றை கையாண்டதிலும் அதுகுறித்து தெரிவித்த பல கருத்துகளும் சர்ச்சையாகவே இருந்தன. பெருந்தொற்று அவரின் புகழை சரித்தது என்றும் கூறலாம்.

மார்ச் மாதம் பிரேசிலில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை இல்லாத அளவு அதிகரித்திருந்தது ஆனால் அதற்கு அடுத்த நாள் மக்கள் கொவிட் குறித்து அழுது புலம்புவதை நிறுத்த வேண்டும் என்றார் பொல்சொனாரோ.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். கடந்த திங்களன்று கொரோனா தடுப்பு மருந்துக்கும் எய்ட்ஸுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி அவர் பதிவிட்டிருந்த வீடியோவை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

பொல்சொனாரோவின் வீடியோ யூடியுப் தளத்திலும் முடக்கம் செய்யப்பட்டு அவரின் செனல் ஒரு வார காலத்திற்கு நிறுத்தப்பட்டது.

Thu, 10/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை