நாட்டில் தடுப்பூசி ஏற்றல் வெற்றிகரமாக முன்னெடுப்பு

இடைவிலகிய மாணவர்களுக்கு இன்று ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று (22) ஆரம்பமானது.

அனைத்து பாடசாலைகளிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதேவேளை, 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பிறந்த பாடசாலை செல்லாத மற்றும் பாடசாலையில் இருந்து இடைவிலகிய மன்னாரைச் சேர்ந்தோருக்கான பைஸர் முதலாவது தடுப்பு மருந்தேற்றலானது இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முருங்கனில் அமைந்துள்ள நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

தகுதிபெற்றவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழுடன் வருகை தந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற, நிரந்தர வதிவிடதாரிகளும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சைனோபாம் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியானது 25 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நானாட்டான் டிலாசாலே கல்லூரியிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை வழங்கப்படவுள்ளது.

அதேநேரம் 18 தொடக்கம் - 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு 'பைஸர்' தடுப்பூசி ஏற்றும் பணிகள் நுவரெலியா மாவட்டத்திலும் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்படி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1,676 மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 11 பாடசாலைகளைச் சேர்ந்த மேற்படி மாணவர்களுக்கு கொட்டகலை மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பாடசாலை மாணவர்களுக்கு நேற்று தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.

 

 

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை