சிலர் மக்களை குழப்புவதாக உதய கம்மன்பில கண்டனம்
இலங்கையில் எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாட்டில் நேற்று சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை குறித்து விளக்கம் அளித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெற்றோலிய தொழிற்சங்கள் மற்றும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த 04 மாதங்களாக அவர்கள் கூறியது போன்று எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படவில்லை. நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னரே அறிவிப்பேன் என நான் உறுதியளித்தேன். அதன்படி, செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நாட்டில் மசகு எண்ணெய் பற்றாக்குறையொன்று ஏற்பட வாய்ப்புள்ளதென நான் தெரிவித்தேன்.
மசகு எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நான் கூறியிருந்தேன். மீண்டும் அதனையே கூறுகிறேன். நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை. வீணாக குழப்பமடைய வேண்டாம் என்றார்.
from tkn