இந்திய உரம் இறக்குமதியில் எவ்வித மோசடியும் இல்லை

உரத்தின் விலை உள்ளிட்ட விடயங்கள் வெளிப்படுத்தப்படும்

அமைச்சரவை இணை பேச்சாளர்  ரமேஷ் பத்திரண தெரிவிப்பு

இறக்குமதியில் பாரிய பண மோசடி என முன்வைக்கப்படும்  குற்றச்சாட்டுக்கள்  உண்மைக்கு புறம்பானவை

 

இந்தியாவிலிருந்து திரவ நனோ நைட்ரஜன் உர இறக்குமதி விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை. எனவே இறக்குமதி செய்யப்பட்ட உரத்தின் விலை உள்ளிட்ட விடயங்கள் குறித்த உண்மை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்  கேட்கப்பட்ட போது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டே பசுமை விவசாயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எனினும் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய கால மற்றும் நீண்ட கால சிக்கல்கள் காணப்படுகின்றமையை ஏற்றுக் கொள்கின்றோம். நைட்ரஜன் உரத்தினை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், அதன் தரம் தொடர்பில் ஏற்பட்ட சிக்கலால் அதனை நிராகரிக்க நேரிட்டது. இதனால் விவசாயிகள் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வினை வழங்குவதற்காகவே திரவ நனோ நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

 

 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 10/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை