பயிலுனர் பட்டதாரிகளுக்கு மூன்று மாதங்களில் நிரந்தர நியமனம்

53,000 பேர் நன்மை பெறவுள்ளதாக சுசில் அறிவிப்பு

 

பயிலுனர் பட்டதாரிகள் 53ஆயிரம் பேருக்கும் மூன்று மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்தால் ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக அமைக்கமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை வரவு செலவு திட்டத்துக்கு பின்னர் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது,அதுவரையில் ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பாக 5,000 ரூபா மாதாந்தம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கையான ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக மாற்றியமைக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம்.

ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக மாற்றியமைப்பதாக இருந்தால் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அனைத்தும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவேண்டும். ஒருசில அதிபர் சங்கங்கள் இதற்கு தயாரில்லை. தற்போது இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை உபகுழு கலந்துரையாடி வருகின்றது. கலந்துரையாடல்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்துக்கமைய சுற்றுநிருபம் ஒன்றிமூலம் சம்பள பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கலாம்.

அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பயிலுனர் பட்டதாரிகளில் 18ஆயிரம் பேர் அரச பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் தெரிவிப்பவர்களல்ல. ஆனால் ஆசிரியர் சேவைக்கு விருப்பமானவர்கள் வேறு அரச சேவைகளுக்கும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் 53ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகளுக்கும் 03மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது.அதுதொடர்பில் அமைச்சரவை உபகுழு அமைக்கப்பட்டு கலந்துரையாடப்படுகிறது. பயிலுனர் பட்டதாரிகளில் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் உள்ளவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

அந்த தீர்மானம் கிடைத்த பின்னர் அவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள முடியும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

Tue, 10/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை