வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் உரிய விசாரணை வேண்டும்

வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் அரசாங்கம் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்காதுள்ளதென கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதி உடனடியாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்வியின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளப்பூடு மோடியை தொடர்ந்து சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள பாரிய மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த 55ஆயிரம் கிலோ வெள்ளைப்பூடு 7 மில்லியன் ரூபாவுக்கு திருட்டுத்தனமாக விற்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர்களில் ஒருவர் இதனால் தமது பதவியையும் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாகவும் உயர் அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபடமாட்டார்கள் என்றும் சில அமைச்சர்கள் கூறியுள்ளனர். மோசடிகள் தொடர்பிலான கருத்துகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை சிஐடிக்கு அழைக்கின்றனர்.

வெள்ளைப்பூடு மாத்திரம் அல்ல உளுந்து, சீனி, கோதுமை மா, பால் மா, ரின் மீன் உள்ளிட்ட பொருட்களிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் உள்ள போதிலும் அவைத் தொடர்பில் எவ்வித விசாரணைகளும் இடம்பெறுவதை காணக்கூடியதாக இல்லை. அரச நிதியைகொண்டு இடம்பெறும் இவ்வாறான மோசடிகளுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளமை தெளிவாக தெரிகிறது. இதனையொரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதி உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 
Wed, 10/06/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை