மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்கு அரசியல் முகவரி பெற்றுக் கொடுத்த தலைவன்

- இ.தொ.கா ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பிலும், மலையகத்திலும் நிகழ்வுகள்

மலையக மக்களின் பெரும் சொத்தாகவும், மலையக அரசியல் தொழிற்சங்க சிருஷ்டி கர்த்தாவாகவும் விளங்கியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரை மக்களின் நன்மதிப்பைப் பெற்று விளங்கியவர். சர்வதேச மட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உன்னத தலைவன் அவர். இன்று (30.10.2021) அவரது 21வது சிரார்த்த தினம் ஆகும்.

கொள்கையில் தெளிவு, நெஞ்சிலே துணிவு, செயலிலே வேகம், ஓயாத உழைப்பு, தளராத நம்பிக்கை இத்தகைய அம்சங்களைக் கொண்டு தொழிலாளர்களுக்காக போராடப் புறப்பட்டவர் தொழிற்சங்க போராளி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களது உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் 1939 ஆம் ஆண்டு இலங்கை- இந்திய காங்கிரஸ் நிறுவப்பட்டது. இதில் தோட்டத் தொழிலாளர்கள், பல துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் பங்குவகித்தனர். இலங்கை - இந்திய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய 7 உறுப்பினர்களில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களது வாக்குரிமையும், பிரஜாவுரிமையும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டன. இதனை எதிர்த்து காலிமுகத்திடலில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இலங்கது இந்திய காங்கிரஸ் 1952 ஆம் ஆண்டு நடத்தியது. அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானாவார்.

மலையக பெருந்தோட்டத்துறை மக்கள் அன்றைய அரசாங்கத்தாலும், தோட்ட நிர்வாகங்கள், கம்பனிகளாலும் மனிதாபிமானமற்ற முறையில் ஆட்டிப் படைக்கப்பட்டார்கள். பாகுபாடுகள், பாரபட்சங்கள், ஒடுக்குமுறைகள், பழிவாங்கல் ஆகியவை கட்டவிழ்க்கப்பட்டன.

இவற்றை எதிர்த்து ஆங்காங்கே கண்டனக் கூட்டங்களும், விழிப்புணர்ச்சிக் கூட்டங்களும் பரவலாக நடத்தப்பட்டன. இதேவேளை பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் திடீர் திடீர் என வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கும் தோட்டங்களில் இருந்து விரட்டப்படுவதற்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கும் தொழிலாளர் சமூகம் நசுக்கப்படுவதற்கும், கடும் ஆட்சேபனை தெரிவித்து இந்த காலகட்டங்களில் பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் குறிப்பிடத்தக்கவை உருளைவள்ளிப் போராட்டம், மடக்கும்புர போராட்டம், மடுல்கலை கலாபொக்க போராட்டம் ஆகியவை ஆகும்.

மலையக பெருந்தோட்டங்கள் காலனித்துவ காலத்தில் ஆங்கிலேயரின் நிர்வாகத்தின் கீழும், நிறுவனங்களின் கீழும் செயல்பட்டன. சுதேசிகளுடைய நிர்வாகங்களுக்குக் கீழும் இயங்கி வந்துள்ளன. ஆனால் அக்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு, நிர்ணயிக்கப்படாத நிரந்தரமற்ற சம்பளமே வழங்கப்பட்டு வந்தது.

தோட்டங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னரும் உசவசம, ஜனவசம ஆகிய அரச நிறுவனங்களின் கீழ் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. இக்காலகட்டங்களில் கூட தொழிலாளர்களது மாதச் சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் தனியார்துறையாக இருந்த போதும், அரசதுறையாக இருந்த போதும் காத்திரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. எனினும் காரியம் கைகூடவில்லை.

வரட்சிக் காலத்திலும், மழைக் காலத்திலும் சம்பளத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அதேவேளை நாளாந்தம் எடுக்கப்பட வேண்டிய கொழுந்தின் எடையிலும் ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. தினமும் 25 தொடக்கம் 30 இறாத்தல் கொழுந்து பறிக்கப்பட வேண்டும் என விதிமுறை கொண்டு வந்தார்கள். இதே போன்று பல தோட்டங்களிலும் ஒருநாள் பேருக்கு எடுக்கப்பட வேண்டிய எடை ஒரேவிதமாக இருக்கவில்லை. அவற்றில் சில தோட்டங்களில் ஒருநாளில் கூடுதலான கொழுந்தை பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் நிர்ப்பந்தித்தது. குறைவாக பறிக்கப்பட்ட கொழுந்திற்கு 'அரை பேர்' போடப்பட்டது.

தோட்ட நிர்வாகங்கள் ஒருநாள் பேருக்கு கொழுந்தின் எடையை தங்களின் இஷ்டப்படி நிர்ணயித்ததன் விளைவாக பலர் கஷ்டப்பட்டும் முழுப்பயனையும் அடையவில்லை. வரட்சிக் காலத்தில் தேயிலைகள் கருகி கொழுந்துகள் குறைந்து விடுகின்றன. இந்தச் சமயத்தில் அதே நிர்ணயிக்கப்பட்ட எடையை எதிர்பார்க்க முடியாது. அதற்காக தோட்ட நிர்வாகங்கள் கொழுந்தின் எடையில் கடும் வரட்சிக் காலத்தில் ஒரு மாற்றத்தை புகுத்தவில்லை.

இந்த விதமான தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடிகளின் மத்தியில் அவர்களின் விமோசனம் அளிக்கும் திட்டமாகவும், தொழிலாளர்களுக்கு ஒரு நியாயபூர்வமான சம்பளத்தினை கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில், சம்பள கூட்டு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த முதலாவது கூட்டு ஒப்பந்தம் 1967 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

இந்த கூட்டு உடன்படிக்கையானது தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். இதனை இழந்து விட்டால் பல வழிகளிலும் தொழிலாளர்கள் ஊதியங்களைப் பொறுத்தவரை வஞ்சிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும், ஒடுக்கப்பட்டும் விடுவார்கள்.

கூட்டு ஒப்பந்தத்தின் செயற்பாட்டால் நிர்வாகங்கள் நிர்பந்திக்கப்படுகின்றன. இல்லையேல் தோட்டத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பழிவாங்கப்பட்டிருப்பார்கள். அமரர் தொண்டமான் அவர்களின் சாதுரியத்தாலும், அணுகுமுறையாலும்தான் தொழிலாளர்களின் ஒட்டுமொத்தப்பலம் தோட்ட நிர்வாகங்களுக்கும். எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பலத்துக்கு அஞ்சியே முதலாளிமார் சம்மேளனம் தோட்டக் கம்பனிகள், நிர்வாகங்கள் சம்பள உயர்வுகளை வழங்க முன்வருகின்றன. இது தொழிலாளர்களுக்கு ஒரு ஆயுதமாகும்.

ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மலையகத் தமிழர்களின் ஒரு பகுதியினருக்கு இலங்கை பிரஜாவுரிமையும், மற்றொரு பகுதியினருக்கு இந்திய பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் இலங்கை வாக்குரிமை பெற்ற மக்களின் சார்பில் இ.தொ.கா அரசியல் பிரிவு தேர்தல் களத்தில் குதித்து பல வெற்றிகளை பெற்று வந்துள்ளது.

இன்று மலையக தமிழர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், மாகாண அமைச்சர்களாவும், மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் முன்னர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானே இலங்கையில் முதன் முறையாக அமைச்சராக நியமிக்கப்பட்டவராவார்.

அமரர் தொண்டமான் உலகத் தலைவர்கள், சர்வதேச தொழிற்சங்க பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பெருந்தோட்டத்துறை மக்களின் கஷ்டங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்தி இவர்களது மேம்பாட்டிற்காக சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்பி வந்துள்ளார்.

இன்றைய நாளில் கொழும்பிலும், மலையகத்திலும் அமரரின் சிரார்த்த தினத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமரரது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகின்றது. அதனை தொடர்ந்து 7 மணிக்கு சௌமிய பவனில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு நடைபெறுகின்றது.

எஸ்.தேவதாஸ் சவரிமுத்து...
(சிரேஷ்ட ஊடக இணைப்பாளர்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Sat, 10/30/2021 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை