கொரோனா தாக்கத்தினால் நீண்ட விடுமுறையின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகள் நேற்று திங்கட்கிழமை (25) சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மீள திறக்கப்பட்டன. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்தோடு வருகை தந்து இருந்ததை காணமுடிந்தது. பாடசாலைகள் பெற்றோர்களாலும், பழைய மாணவர்களாலும் சிரமதான அடிப்படையில் துப்புரவு செய்யப்பட்டன.
திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய வலய கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகள் கல்வி நடவடிக்கைக்காக மீள ஆரம்பிக்கப்பட்டதாக, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர். சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகள் திறக்கப்பட்டதாக, அதிபர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்டமாக 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகள் கடந்த 21ம் திகதி ஆரம்பமானது. இதேவேளை அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பாடசாலைகளில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.
(ஒலுவில் விசேட நிருபர்)
from tkn