இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டு வரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் 5வது கூட்டம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருந்தது. கொழும்பில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

சிறந்த நிர்வாகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை உறுதிப்படுத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்பன தொடர்பில் இருதரப்பினரும் தாம் கொண்டிருக்கின்ற கடப்பாட்டை மீளுறுதிப்படுத்தினர்.

அத்தோடு அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இருதரப்பினரும் கொண்டிக்கும் அக்கறை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் இருதரப்பினதும் பொதுவான அக்கறைக்குரிய விடயங்களில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

மேலும் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கையாளும் விவகாரம் தொடர்பில் இருதரப்பினரும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அத்தோடு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு சமத்துவமான முறையில் தடுப்பூசி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவெக்ஸ் செயற்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவரும் பங்களிப்பையும் இலங்கையின் பிரதிநிதிகள் பாராட்டினர்.

அதேவேளை நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் ஊடாக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஒன்றிணைவை ஏற்படுவதன் அவசியம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

.எதிர்வரும் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான செயற்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் இவ்விடயத்தில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உறுதிப்பாடும் எட்டப்பட்டது.அத்தோடு மரணதண்டனை குறித்து தமது எதிர்ப்பை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகள், இலங்கை அதனை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தாம் ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 10/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை