எல்லைதாண்டிய தமிழக மீன்பிடி படகு விபத்து

நீரில் மூழ்கிய இருவர் மீட்பு; ஒருவர் மாயம்

யாழ்ப்பாணம், காரைநகர், கோவளம் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு விபத்துக்குள்ளான  நிலையில், அதிலிருந்து மீட்கப்பட்ட இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

படகிலிருந்து மற்றுமொருவர் காணாமல்போயுள்ளதாகக் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்திலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவர், இலங்கை காரைநகர் - கோவிலம் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

அதன்பின்னர், இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட அவர்கள் மூவரையும் சுற்றிவளைக்க முயன்றபோது கடற்படையினரின் கண்காணிப்புப் படகு மோதியதில் மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியுள்ளது.

இதனால் படகில் இருந்த மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். பின்னர் அவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், மற்றைய மீனவர் காணாமல் போயுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இருவரும் காரைநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wed, 10/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை