17,18 ஆம் திகதிகளில் சுமந்திரன் போராட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (13) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,..

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள்  உரத்தை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக தென் பகுதியிலும் இந்த பிரச்சினையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தென் பகுதியில் அரசுக்கெதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் விவசாய அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

தற்போது நாட்டிலுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயமல்ல.

அது சமூகப் பொறுப்புக்கும் மாறானதென்பதை கருத்திற் கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை நடத்த தீர்மானித்துள்ளோம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 28 கமநல சேவை நிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கு முன்னாலும் எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி காலை 09.00 மணிக்கு சமூகப் பொறுப்போடு சமூக இடைவெளியை பின்பற்றி தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை செய்யவுள்ளோம்.

தெற்கிலுள்ள ஏனைய எதிரணி அரசியல் தலைவர்களுடன் பேசி உள்ளோம். அவர்களும் தங்களுடைய பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினை காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக தமது பகுதியில் இந்த போராட்டங்கள் நடத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.அதாவது எமக்கு பசளை கிடைக்கும் வரை இவ்வாறான போராட்டங்களை நடத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

Thu, 10/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை