சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் தீர்மானம்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக மத்திய வங்கி பிணை மோசடி விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நேற்று (25) தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற மூன்றாவது பிணைமுறிகள் ஏலத்தின்போது மோசடியாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந் நிலையில் வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ள, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இந்ரஜித் குமாரசுவாமி, நிதி அமைச்சின் செயலர் எச்.ஆர். ஆட்டிகல உள்ளிட்ட ஐவரை அன்றைய தினம் சாட்சி வழங்க நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெந்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றமே மேற்படி தீர்மானத்தை எடுத்து உத்தரவு பிறப்பித்தது.
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn