கடமைகளை சுயாதீனமாகசெய்ய முடியாத சூழ்நிலை

அரசியல் அழுத்தம் காரணமாகவே பதவி விலகல்

நுகர்வோர் அதிகாரசபையின் நிறைவேற்றுபணிப்பாளர் தெரிவிப்பு

தொடர்ச்சியான அரசியல் அழுத்தம் காரணமாக தனது கடமையை சுயாதீனமான முறையில் முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது. ஆகவே பதவி விலக தீர்மானித்துள்ளேன் என தெரிவித்துள்ள நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தன, பதவி விலகல் கடிதத்தை நுகர்வோர் பாதுகாப்பு சேவைகள் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிடம் கையளிக்கவுள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட முயற்சித்தேன். ஆனால் தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்களினால் சேவையாற்ற முடியாமல் போயுள்ளது.

வெள்ளை பூண்டு கொள்கலன்கள் இரண்டு சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டமை, உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றன.

பதவி விலகுவதற்கான தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் நிறுவனத்தின் வாகனத்தையும், சாரதியையும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவரிடம் ஒப்படைத்துள்ளேன்.

சீனி, கோதுமை மா, உழுந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மோசடியான முறையில் வெளியேற்றப்படுகின்றன. சதொச நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வெள்ளை பூண்டு சட்டவிரோதமான முறையில் வெளிறேப்பட்டன.

சுபீட்சமான இலக்கு கொள்கை என்பதொன்று கிடையாது. வியாபாரிகளின் தேவைக்காகவே அரசாங்கம் செயற்படுகிறது. மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பால்மா, சீமெந்து, கோதுமை மா உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். ஒப்பந்தம் கைச்சாத்திடுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. பொருளாதாரத்திற்கும் சாதகமாக அமையாது. குறித்த நிறுவனங்களே பயன்பெறும் என்றார்.

Tue, 09/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை