தவறான முகநூல் பதிவுகள் தடுப்புக் காவலில் இளைஞர்கள்

மன்னித்து விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு பெற்றோர் கடிதம்

 

சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புகைப்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் சிலர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

திருகோணமலை நகரில் நேற்று முன்தினம் (11) இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பின் போது கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

எமது பிள்ளைகளுக்கும் பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் கூறும் தரப்பினருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனவும் அவர்களுடைய வயதை கணக்கிட்டால் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றதே அவர்களுக்கு தெரியாது.

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அதன் பின்விளைவுகள் பற்றி அறியாமல் தவறுதலாக சில பதிவுகளை பதிவிட்டிருந்தார்கள் அது தவறுதான் அந்த தவறை மன்னித்து விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவண செய்ய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை அவர்கள் செய்யமாட்டார்கள் எனவும் மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்கள்.

இவர்கள் தொடர்பாக வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லையெனவும் அவர்களுடைய உழைப்பில்தான் எங்களுடைய வாழ்வாதாரம் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இப்போது நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றோம் எனவே எங்களுடைய குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புகைப்படங்களையும், செய்திகளையும் பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலையில் சில இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த வருடமும் இவ்வருட ஆரம்பத்திலும் கைது செய்யப்பட்டிருந்தார்கள் இவர்களுடைய வழக்குகள் மூதூர் மற்றும் திருகோணமலை நீதி மன்றங்களிலும் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் அவர்களுடைய வழக்குகள் தொடர்பில் கேட்டபோது இங்கு பிணை வழங்க முடியாது எனவும் குறிப்பிடுகின்றனர். எனவே ஜனாதிபதி அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை மன்னித்து தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

ரொட்டவெவ குறூப், அன்புவழிபுரம் தினகரன் நிருபர்கள்

Mon, 09/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை