இராணுவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐ.நா புலிகளை மறப்பது ஏன்?

புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்து மௌனம்

அமைச்சர் வாசுதேவ ஆதங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பினை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொடர்பில் விவாதம் ஒவ்வொரு முறையும் இடம்பெறுகிறது.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றமை பல விடயங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையானதாக காணப்பட வேண்டும்.

ஆனால் தற்போது மனித உரிமை பேரவை தனது பொதுக் கொள்கைக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது. 30 வருட கால யுத்தம் ஒரு இனத்திற்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இலங்கை மக்கள் அனைவருக்கும் பல்வேறு வழிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகள் அமைப்பினை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல் குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டுபவர்கள் இலங்கையில் வாழ்பவர்கள் அல்ல.

புலம் பெயர் அமைப்புக்கள் தங்களின் சுய தேவைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட துரிதகர அபிவிருத்தி குறித்து இவர்கள் கருத்துரைப்பதில்லை.

இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை.

யுத்தம் நிறைவுப் பெற்றதன் பின்னர் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரால் இடம்பெற்ற குற்றங்களை அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கு என கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Thu, 09/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை