தாய்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் முன்வரவேண்டும்

உழைப்பின் ஒரு பகுதியை நாட்டுக்கு அனுப்புமாறு அமைச்சர் பீரிஸ் கோரிக்கை

 

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர் தாய்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த உழைப்பின் ஒருபகுதியை நாட்டுக்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் பெறுமதியை காட்டிலும் மேலதிகமாக இரண்டு ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமருடன் இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அங்கு வாழும் இலங்கையர்களுடன் நடைபெற்ற சினேகப்பூர்வமான கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தமது நாடுதான் அடையாளம். என்றாலும் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டின் அரச தலைவரை விமர்சித்தல், கறுப்புக் கொடிகளை காண்பித்தல் உட்பட பல்வேறு விடயங்களை செய்வது அரசுக்கு எதிரானதாக அமையாது.

வெளிநாடுகளிலிருந்துக்கொண்டு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரச தலைவர்களுக்கு எதிராகவோ மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிப்பு ஏற்படுவது நாட்டுக்கேயாகும்.

நாட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டவர்கள் உள்ளனர். நாட்டை நாசமாக்கும் நோக்கமுடையவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை கொண்டு அவர்கள் நாட்டை பலமிழக்க செய்ய முற்படுகின்றனர்.

கொவிட்19 தொற்றுக்கு மத்தியிலும் நாடு பல்வேறு துறைகளில் வளரச்சியை காண்பித்துள்ளது. அவ்வாறான சூழலில் நாட்டின் தலைவருக்கு எதிராக நாட்டில் அல்ல வெளிநாட்டில் இழுக்கை ஏற்படுத்துகின்றமை நல்ல விடயமல்ல.

சமகால அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் தமது உழைப்பின் ஒரு பகுதியை தாய்நாட்டுக்கு அனுப்பினால் எமது பொருளாதாரத்துக்கு அது மிகவும் பயனுடையதாக இருக்கும். நிதி அமைச்சும் திறைசேரியும் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அனுப்பப்படும் டொலர் ஒன்றுக்கு பெறுமதியை காட்டிலும் மேலதிகமாக 02 ரூபாவை செலுத்த முடிவுசெய்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 09/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை