இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி வாய்ப்பு

ஒத்துழைப்புகளை வழங்க தயாரென இந்திய தூதர் தெரிவிப்பு

இலங்கை - இந்தியாவுக்கிடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தி, இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி வாய்ப்புகளை விரிவுப்படுத்த பூரண ஒத்துழைப்புகளை வழங்குவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளார்.

கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் இந்தச் சந்திப்பில் ஆழமாக ஆராய்ந்ததுடன், இரு நாட்டுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்தவும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

உயர்கல்வி, கல்வி மற்றும் பாடசாலை கல்வியின் முன்னேற்றம், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியின் முன்னேற்றம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியின் முன்னேற்றம், ஆயுர்வேதத்தின் "சித்த" மற்றும் "யுனானி" துறைகளில் அறிவின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதும் குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய-, இலங்கை நட்புறவானது பல நூற்றாண்டுகள் பழமையானது.

கல்வி மற்றும் கலாசார பாரம்பரியம் பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கும், கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும் கல்வி நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் ஆராய்ந்துள்ளனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Tue, 09/14/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை