அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் இடையே சீனாவை எதிர்கொள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

அணுசக்தி நீர்மூழ்கியை உருவாக்குகிறது ஆஸி

சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படும், வரலாற்று முக்கியம் வாய்ந்த ஆசிய பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இதன்மூலம் அமெரிக்கா வழங்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவுஸ்திரேலியா முதல் முறை அணு சக்தி வல்லமை பெற்ற நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவுள்ளது.

ஆக்கஸ் என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் இராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது.

அவுஸ்திரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் 50 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது. இது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால் இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

“ஆக்கஸின் கீழ் முதல் முயற்சியாக , அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியா பெறுவதற்கு உதவி செய்வோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

“அவுஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்” என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் அவுஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, “கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன்” ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறினார்.

“இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும், மக்களைக் காக்கவும் இன்றியமையாதது” என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் பிரிட்டனின் எச்.எம்.எஸ் ராணி எலிசபெத் விமானம் தாங்கிக் கப்பல் இந்தோ - பசிபிக் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் அமெரிக்க இராணுவத்தினரும் உபகரணங்களும் இருந்தன.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்டன், அமெரிக்க, அவுஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

“இது சைபர்ஸ்பேஸ் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் முன்னணியில் உள்ளது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய நாட்டின் தலைவர்கள் வீடியோ கொன்பரன்சிங் முறையில் ஒரே நேரத்தில் பங்கேற்று கூட்டுத் திட்டம் குறித்து அறிவித்திருப்பது, இந்த உடன்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

எனினும் இந்த உடன்படிக்கையை பொறுப்பற்ற ஒன்று என்ற சீனா கண்டித்துள்ளது. “பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தைன்மையை பொருட்படுத்தாததாகவும் ஆயுதப்போட்டியை தீவிரப்படுத்துவதாகவும் இந்த உடன்படிக்கை உள்ளது” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகள் “பனிப்போர் மனநிலை மற்றும் பாரபட்சமான சித்தாந்தத்தை” கொண்டிருப்பதாக வொஷிங்டனில் உள்ள சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.

மறுபுறம் இந்த ஒப்பந்தத்தால் அவுஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்திருக்கும் பிரான்ஸும் கோபத்தை வெளியிட்டுள்ளது. “இது உண்மையில் முதுகில் குத்தும் செயல்” என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் யிவெஸ் லே ட்ரியன் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 09/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை