ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று (14) அமெரிக்காவின் நியூ​ேயார்க்கில் ஆரம்பமாக உள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். “நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், கொவிட் 19ஐ ஒடுக்குவதன் மூலம் உலக ஸ்திரத்தன்மையை மீண்டும் உருவாக்குதல், கிரகத்தின் தேவைகளுக்கு  பதிலளித்தல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் சகவாழ்வை புதுப்பித்தல்” ஆகியவற்றில் கவனம் செலுத்துவது கூட்டத்தொடரின் நோக்கமாகவுள்ளது.

ஐ.நா அமர்வை சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரச தலைவர்களின் 76ஆவது அமர்வு நியூயார்க்கில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றவுள்ளார். ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பதுடன், இலங்கைக்கு வெளியே சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றும் முதல் சந்தர்ப்பமும் ஆகும். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நியூயோர்க் செல்லவுள்ளனர். தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகளுடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடர்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

உலக அமைதி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தன்னார்வத்துடன் பங்களிக்கும் சுதந்திர நாடுகளின் தனித்துவமான கூட்டுறவு அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 24, 1945 அன்று 51 உறுப்பு நாடுகளுடன் முறையாக நிறுவப்பட்டது.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக டிசம்பர் 14, 1955இல் ஆனது. இன்று 193 உறுப்பு நாடுகள் ஐ.நாவின் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 09/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை