தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி மேல் மாகாணத்துக்குள் நுழைந்த 263 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி மேல் மாகாணத்துக்குள் பிரவேசிக்க முற்பட்ட 142 வாகனங்களும் அவற்றில் பயணித்த 263 பேரும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மேல் மாகாண எல்லைகளில் காணப்படும் 13 வீதித்தடைகளில் நேற்று முன்தினம்(16) வியாழக்கிழமை 106 பொலிஸார் மற்றும் 78 இராணுவத்தினர் இணைந்து கண்காணிப்புக்களை முன்னெடுத்தனர். இதன்போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 548 வாகனங்களும் அவற்றில் பயணித்த 917 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேபோன்று மேல் மாகாணத்துக்குள் நுழைய முற்பட்ட 602 வாகனங்களும் அவற்றில் பயணித்த 1,093 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது அனுமதியின்றி பயணிக்க முற்பட்ட 142 வாகனங்களும் அவற்றில் பயணித்த 263 நபர்களும் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேல் மாகாணத்தில் வியாழனன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பில் கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்கு 285 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்களால் 5,698 வாகனங்களும் 9,335 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றார்.

 

Sat, 09/18/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை