ரூ. 16 மில்லியன் செலவில் மருதங்குளம் புனரமைப்பு

முல்லைத்தீவு, வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் கடந்த 2018 ஆம் ஆண்டு உடைப்பெடுத்த மருதங்குளத்தின் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் 16 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்துபட்டு வான், மருதன் குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 125 க்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள இக்குளமானது கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் உடைப்பெடுத்துள்ளது. இந் நிலையில் மீளவும் புனரமைக்கப்பட்டு சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய வகையில் 9 அடி 6 அங்குலம் கொண்டதும் 2275.96 ஏக்கர் அடி தண்ணீர் கொள்ளளவை கொள்ளக்கூடிய வகையில் இக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்து 2018ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அதி கூடிய மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளத்தின் வான் பகுதியில் நீர்க் கசிவு ஏற்பட்டது. இந் நிலையில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், விவசாயிகள், இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் குளம் உடைப்பு நீர் முழுமையாக வெளியேறியது. 2019ஆம் ஆண்டு வான் பகுதிக்கு குறுக்காக தற்காலிக அணை ஒன்று அமைக்கப்பட்டு ஆறு அடி வரையான நீர் சேமிக்கப்பட்டதுடன் 45 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இக் குளத்தில் நீர் கொள்ளளவை மேலும் இரண்டு அடியால் அதிகரித்து மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் வான்கதவுகள் அமைக்கப்பட்டு பாரிய அளவில் புனரமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டிலேயே உலக வங்கியின் நிதியுதவியுடன குறித்த குளத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன .

விவசாயிகளின் பயிர் செய்கை நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு நீரை சேமிக்கும் வகையில் தற்போது முதற்கட்டமாக திணைக்கள நிதியிலிருந்து 16 மில்லியன் ரூபா செலவில் முதற்கட்ட புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது-.

பரந்தன் குறூப் நிருபர்

 
Wed, 09/01/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை