14ஆவது திருத்தச்சட்டம் குறுக்கு வழியில் நிறைவேற்றப்படவில்லை

அரசியலமப்பின் 14ஆவது திருத்தச்சட்டம், அரசியலமைப்புக்கு உட்பட்டே நிறைவேற்றப்பட்டது. மாறாக குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமயில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து சிறப்புரிமை கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

அரசியலமைப்பின் 14ஆவது திருத்தம் தறவான முறையில் அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகாகந்த கொடிதுவக்கு என்பவர் எனக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடுத்திருக்கின்றார். அந்த முறைப்பாட்டின் மூலம் அவர் தெரிவிப்பது, அரசியலமைப்பின் 14ஆம் திருத்தம் உரிய முறைப்படி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படு அனுமதிக்கப்படாமல் அன்றைய சபாநாயகர் டி.எஸ். சேனாநாயக்க அதில் கைச்சாத்திட்டிருக்கின்றார் என்பதாகும். அவரின் இந்த முறைப்பாடு தவறானதாகும். அரசியலமைப்பின் 14ஆம் திருத்தம் சட்ட ரீதியிலே நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் குறித்த அரசியலமைப்பு திருத்தும் தயாரிக்கும்போது அந்த அமைச்சரவை குழுவில் நானும் இருந்தேன். அமைச்சரவையில் ஆராய்ந்து, அரசியலமைப்புக்கமையவே 14ஆம் திருத்தம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இந்த விடயத்தை தெளிவாக விளங்கி, முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்திலும் வேறு சட்டங்கள் தொடர்பாகவும் சந்தேகம் எழுப்பி பாராளுமன்றத்தின் கெளரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படஇடமிருக்கின்றது. அதற்கு நாங்கள் இடமளிக்கக்கூடாது. சில ஊடகங்களுக்கு இதற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றன என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

 

Wed, 09/08/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை