மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு

 

நாட்டில் அனைத்து மக்களுக்கும் மூன்றாவது தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கொவிட் வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க நேற்றைய தினமும் கொழும்பு, மட்டக்குளி, களுத்துறை மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் சினோபாம் மற்றும் எஸ்ட்ரா செனேகா ஆகிய தடுப்பூசிகள் அந்த பிரதேசங்களில் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சைனோபாம் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பு விகாரமாதேவி பூங்கா, சுகததாச உள்ளக விளையாட்டரங்கு மற்றும் வெஹரஹெர இராணுவ மருத்துவ பிரிவிலும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தவிர நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் எஸ்ட்ரா செனேகா முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 08/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை