பிராந்திய இராஜதந்திரிகள் கருத்து
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார, பூகோள ரீதியான மற்றும் உலகளாவிய ஆதிக்க போட்டா போடடி தீவிரமடைந்துவரும் வேளையில் சீனாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள தைவானின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி பிராந்திய நாடுகளுக்கு மத்தியில் எழுந்திருப்பதாகவும் தைவானின் எதிர்காலத்தை அமெரிக்கா உறுதியான இராஜதந்திர நகர்வுகளின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவை எதிர்பார்ப்பதாக அப்பிராந்திய அரசியல் வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சீனாவை கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றி அதை 1949ம் ஆண்டு சீன மக்கள் குடியரசு என்பதாக அறிவித்தது. அச் சமயத்தில் சீனாவை ஆண்டுவந்த சியாங்கை ஷேக் தைவானுக்கு தப்பிச் சென்று தனி நாடாக அதை ஆட்சி செய்து வந்தார்.
ஆனால் சீனா அதை ஒரு மாகாணமாகவே கருதுகிறது. 2049ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் சீனா தன் நூற்றாண்டைக் கொண்டாடும் போது சீனா தாய்வானை உள்ளடக்கிய ஒரு நாடாக இருப்பதையே ஜனாதிபதி ஸிஜின்பிங் விரும்புவதாகக் குறிப்பிடும் பிராந்திய இராஜதந்திர வட்டாரங்கள், தாய்வானை சீனா ஆக்கிரமித்து தனது மாகாணங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ளுமானால் அது அமெரிக்க பிராந்திய மூலோபாய சித்தாந்தங்களுக்கு பாரிய அடியாக அமையும் என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு இரண்டு உதாரணங்களை அவர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். முதலாவது 1950 ஜுனில் ஆரம்பமான கொரிய யுத்தம். அமெரிக்க வெளியுறவு செயலாளரான இராஜதந்திரி டீன் எச்சிஸன் 1950 ஜனவரி 12ம் திகதி அமெரிக்க தேசிய பத்திரிகை கழகத்தில் உரையாற்றும் போது சீன, ரஷ்ய கம்யூனிஸ்ட் பயமுறுத்தல் எலுஷியன் தீவுகளில் இருந்து பிலிப்பைன்ஸ், ஜப்பானின் ஒக்கி நாவா வரை நீண்டு செல்லும் எனக் குறிப்பிட்டார். இந்த பிராந்தியம் அமெரிக்க பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டது என்பதையே அவர் கூற வந்தார். தன் வரிசைப்படுத்தலில் அவர் கொரியாவை உள்ளடக்கவில்லை. தென் கொரியா மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு கவலை இல்லை என்பதாக இது புரிந்து கொள்ளப்பட்டதாலேயே கொரிய யுத்தம் மூண்டது என்பது பிராந்திய இராஜதந்திரிகளின் முடிவு.
1990 ஜுலை 25ம் திகதி அமெரிக்க தூதுவர் ஏப்ரில் கிளஸ்பி தனது நேர்காணலில், குவைத்துடனான உங்கள எல்லைப் பிரச்சினை தொடர்பில் வொஷிங்டனுக்கு எந்தக்கருத்தும் கிடையாது என ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைனிடம் தெரிவித்திருந்தார். அவர் அப்படிச் சொன்னதை, குவைத்- ஈரான் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடாது என எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்தே வளைகுடா யுத்தம் ஆரம்பமானது என்பதையும் எடுத்துக்காட்டும் பிராந்திய அரசியல் விமர்சனங்கள், இத்தகைய தவறை அமெரிக்கா தாய்வான் விவகாரத்தில் விட்டுவிடக்கூடாது என்று கூறுகின்றார்.
தைவான் 15ம் நூற்றாண்டுவரை பெரும்பாலும் சுதந்திரநாடாகவே விளங்கி வந்திருக்கிறது. இறுதி 400 ஆண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயர், ஸ்பானியர், டச்சு மற்றும் ஜப்பானியரின ஆட்சிக்கு அந்நாடு உட்பட்டிருந்தது. 1945இல் ஜப்பான் சரணடைந்த போது தைவான் மீதான தன் இறைமையை அது கைவிட்டது. தைவான் எதிர்காலத்தை தீர்மானிக்கப்படாத விடயமாகவே அச்சமயம் அமெரிக்கா கருதியிருந்தது. 1951 சான்பிரான்ஸிஸ்கோ சமாதான மாநாட்டின் போது ஐ. நா. சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுயநிர்ணய கோட்பாட்டுக்கே தாய்வானை விடப்பட வேண்டும் என்று பல உறுப்பு நாடுகள் தெரிவித்திருந்தன.
தனிநாடாக அங்கீகரிப்பதற்கான சகல தகுதிகளையும் தாய்வான் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவின மொத்த சனத்தொகை 26 மில்லியன். தாய்வான் சனத்தொகை 24 மில்லியன். 160 ஐ. நா. உறுப்பு நாடுகளில் 80 சதவீதமானவை தைவானைவிட குறைந்த சனத்தொகை கொண்ட நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn