ஜெயலலிதா மரணத்தில் இன்னும் தீர்க்கப்படாத பெரும் மர்மங்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை தீர்த்து வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தி.மு.கவின் தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை அவிழ்ப்போம்’ என்பது முக்கிய விஷயமாக இருந்தது. இந்த நிலையில், மைத்ரேயன் இவ்வாறு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களைப் பொறுத்தவரை ஜெயலலிதா இதயதெய்வம் மட்டுமல்ல குலதெய்வமாக பூஜிக்கப்படுகிறார். நானெல்லாம் ஜெயலலிதா அவர்களின் நிழலில் மட்டுமே வளர்ந்தவன். 2016 செப்டம்பர் 22 ம் திகதி உடல்நலம் குன்றி ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, விரைவில் தேறி விடுவார் என்றுதான் நம்பினோம். ஆனால் டிசம்பர் 5 ஆம் திகதி ஜெயலலிதா அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சி அளித்தது.

2017 பெப்ரவரி 7 ஆம் திகதி பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்பது முக்கிய முழக்கமாக இருந்தது. 2017 பெப்ரவரி மாதம் என் தலைமையில் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம். பணம் செலவானதுதான் மிச்சம். 2017 ஓகஸ்ட்டில் அணிகள் இணைந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருந்தது. அதையடுத்து 2017 செப்டம்பர்25 ஆம் திகதி நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

90% விசாரணை முடிவுற்ற நிலையில் , 2019 ஏப்ரலில் அப்பலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் ஆணையத்திற்கு எதிராக தடையாணை பெற்றது. இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத் தடை காரணமாக எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவிடப்பட்டதுதான் மிச்சம். 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 21 இல் வரிசை எண் 22ஈல் " ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்ம குறித்து கழக ஆட்சியில் முறையான விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு , கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையினை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிகிறேன். ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்று முடிவு வந்தால் ஒவ்வொரு அ.இ.அ.தி.மு.க தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதிப் பெருமூச்சும் விடுவான். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் தனிக் கவனம் செலுத்தி, உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்கவும், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்யவும், அதன் மூலம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து சரியாக 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவுநாள் வருகிறது.அதற்குள் முதலமைச்சர் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்”.

இவ்வாறு மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை