இனஐக்கியத்தை கட்டியெழுப்ப பாடுபட்ட யூ.எல்.எம் பாருக்

கேகாலை மாவட்டத்தின் முதலாவது சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூனூஸ் லெப்பே முஹம்மது பாரூக் கடந்த 6 ஆம் காலமானார். ருவன்வல்லை பாராளுமன்ற உறுப்பினராக, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக, ஆர். பிரேமதாச அரசில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக, இலங்கை மத்திய போக்குவரத்துச் சபைத் தலைவராக பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், இறுதிக் காலம் வரை சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இனஐக்கியத்தைக் கட்டியெழுப்பப் பாடுபட்ட முன்மாதிரி அரசியல்வாதியாக அவர் திகழ்கின்றார்.

ருவன்வல்லை பாராளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதவியேற்ற யூ.எல்.எம்.பாரூக், என்றுமே சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார். கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அவராவார்.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச 1956ஆம் ஆண்டு ருவன்வெல்லையில் போட்டியிட்ட போது, பாரூக் 15 வயது இளைஞராவார். அன்று பிரேமதாசவின் பிரதான அலுவலகம் பாரூக்கின் தந்தைக்குரிய ஒரு கட்டடத்திலே இயங்கியது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி போய் வருவதன் மூலம் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு, பாடசாலை மாணவர் காலத்திலிருந்தே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். முன்னாள் தொழில் அமைச்சரும் ருவன்வல்லை எம்.பி.யுமான பி.சீ.இம்புலானவுடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தி, அவரது வழிகாட்டலுடன் ஐ.தே.க மூலம் நேரடியாக அரசியலில் பிரவேசித்தார்.

1964ஆம் ஆண்டு ருவன்வல்லை கிராம சபைக்கு கன்னத்தோட்டை வட்டார ஐ.தே.க. அபேட்சகராகப் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அடுத்து நடைபெற்ற கிராம சபை தேர்தலிலும் பாரூக் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருவன்வல்லை தொகுதியின் ஐ.தே.க. மத்திய அமைப்பின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் வெற்றி பெற்றார்.

1980ஆம் ஆண்டில் கேகாலை மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகப் பணிபுரிந்தார். 1988ஆம் ஆண்டு ருவன்வெல்லை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தொழில் அமைச்சர் பி.சீ. இம்புலான ஊவா மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றதனால் ஏற்பட்ட ருவன்வல்லை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு இரகசிய வாக்கெடுப்பு கட்சித் தலைமையகத்தில் நடத்தப்பட்டது. இத்தெரிவில் பாரூக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

இதன்படி ஐ.தே.க. செயற்குழு பாரூக்கை ருவன்வெல்லை எம்.பி.யாக நியமிப்பதற்கு ஏகமனதாக முடிவு செய்தது. 1988.06.20 ஆம் திகதி பாரூக் தனது 47 ஆவது பிறந்த தினத்தன்று ருவன்வெல்லை எம்.பி.யாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 1989 பொதுத் தேர்தல் வரை ருவன்வல்லை எம்.பி.யாகப் பதவி வகித்த இவர், 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் கேகாலை மாவட்ட அபேட்சராகப் போட்டியிட்டு, மீண்டும் கேகாலை மாவட்ட எம்.பி.யானார். 17,000 பெரும்பான்மை வாக்குகளால் ருவன்வல்லை தொகுதியில் வெற்றி பெற்றார்.

1990ஆம் ஆண்டு போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற பாரூக், போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். டிப்போக்களுக்கும் புகையிரத நிலையங்களுக்கும் திடீர் விஜயங்களை மேற்கொண்டு, போக்குவரத்து சேவையில் காணப்படும் ஊழல், மோசடி, கவனயீனம், வீண்விரயம் போன்றவற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தார்.

டிப்போக்கள் பலவற்றின் ஊழியர்களை ஒன்றுசேர்த்து பழுதடைந்துள்ள பஸ் வண்டிகளை சிரமதானம் மூலம் திருத்தி, சேவையிலீடுபடுத்தும் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தி டிப்போக்களில் மாதக்கணக்கில் தேங்கி நின்ற பஸ்கள் சேவையில் ஈடுபட வழி செய்தார். வடக்கு – கிழக்கு மாகாணத்தில் பஸ் சேவைகளைப் புனரமைக்கும் பொறுப்பு பாரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மன்னார் தவிர்ந்த வடக்கு கிழக்கின் சகல இ.போ.ச டிப்போக்களும் இவரது தலைமையிலே மக்கள் மயப்படுத்தப்பட்டன. மட்டக்களப்பு டிப்போ மக்கள் மயப்படுத்தப்படும் நிகழ்ச்சிக்குச் சென்ற போது இவர் போகும் பாதையில் கண்ணிவெடி வைக்கப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பினார். கேகாலை மாவட்ட முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தை ஏற்படுத்தி சப்ரகமுவ மாகாண சபை மூலம் கேகாலை மாவட்டத்திலுள்ள அநேக முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கிய கட்டடப் பிரச்சினைக்கு ஒரே வருடத்தில் தீர்வு பெற்றுக் கொடுத்தார். கன்னத்தோட்டை சுலைமானியா பாடசாலையை மத்திய கல்லூரியாகத் தரமுயர்த்தினார்.

2000ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமுக்கு இடமளித்து தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீங்கிக் கொண்டார். அதன் பின் அவரது மகன் நிஹால் பாரூக், சப்ரகமுவ மாகாண சபைக்கு 2000ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மாகாண சபை கலைக்கப்படும் வரை இவர் மாகாணசபைத் தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

என்.எம்.அமீன்

Mon, 08/09/2021 - 15:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை