அத்தியாவசிய பணியாளர்கள் அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்

மாகாணங்களுக்கிடையில் செல்லும் அனுமதிக்கு அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை  பயன்படுத்தலாமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கிடையில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்பதால் ஆகஸ்ட் 31 வரை வார இறுதியில் பயணங்களை மேற்கொள்ளவும், உறவினர்களைப் பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனவே ஒவ்வொரு மாகாணத்தின் எல்லைகளிலும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுமென்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற அனுமதி வழங்கப்படாத அதே நேரத்தில் வெளியாட்கள் அந்த பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், சுகாதாரம், பாதுகாப்பு, நீர், தகவல் தொடர்பு, மின்சாரம், ஊடகம் மற்றும் தொடர்புடைய சேவைகள், நீதித்துறை சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காமல் தொடர்ந்து செயற்படும்.
 

Thu, 08/12/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை