காபூல் விமானநிலைய தாக்குதலுக்கு பின் வெளியேற்ற பணிகள் மீண்டும் ஆரம்பம்

உயிரிழப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்வு

காபூல் விமானநிலையத்தில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட 108 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் மேலும் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை அமெரிக்கா நேற்று மீண்டும் ஆரம்பித்தது.

விமானநிலைத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை இரு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதாக அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர். விமானநிலையத்தின் முனையில் இருக்கும் கால்வாய் பகுதியில் பல டஜன் சடலங்கள் வைக்கப்பட்டிருக்கும் படங்களை அங்கிருக்கு ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கான் நாட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. தவிர 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டினர் மற்றும் தலிபான்கள் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருக்கும் ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

‘இந்த நடவடிக்கையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும், அதனை நாம் செய்வோம்’ என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை பிடிப்போம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கான் தலிபான்களிடம் வீழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் இருந்து 100,000க்கும் அதிகமானவர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கப் படை வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு ஆப்கானில் இருந்து வெளியேற தீர்மானித்திருக்கும் நிலையில் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு விமானநிலையத்தை நோக்கி நூற்றுக்கணக்கான ஆப்கானியர் குவிந்துள்ளனர்.

எனினும் இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்வதாக உறுதி அளித்திருக்கும் பைடன், ‘பயங்கரவாதிகளுக்கு பயந்து பின்வாங்கமாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணி அளவிலேயே தாக்குதல்கள் இடம்பெற்றன.

ஆப்கான் மற்றும் பிரிட்டன் படைகள் மக்கள் விமானநிலையத்திற்குள் அனுமதிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அபெய் வாயிலை இலக்கு வைத்தே முதல் தாக்குதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.

சில நிமிடங்கள் கழித்து பிரிட்டனுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் ஆப்கானியர்களை ஏற்பது தொடர்பில் செயற்பாடுகளை மேற்கொள்ள பிரிட்டன் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் இரண்டாவது குண்டு வெடித்துள்ளது.

ஏற்கனவே இங்கு ஐ.எஸ் குழுவினரால் தற்கொலை தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் எச்சரித்திருந்தபோதும் தாக்குதல் நடத்தப்படும்போதும் அங்கு பெரும் கூட்டம் கூடி இருந்தது.

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் குழு உரிமை கோரியுள்ளது.

‘நாம் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டோம். அவர்களை வேட்டையாடி இதற்கு விலை கொடுப்போம்’ என்று ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல்களில் பதின்மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகத் தலைவர் ஜெனரல் பிரான்க் மெக்கன்சி தெரிவித்தார். கடந்த 2020 பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் ஆப்கானில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படும் முதல் சம்பவமாக இது உள்ளது.

ஐ.எஸ் குழுவின் அச்சுறுத்தல் இன்னும் உச்ச கட்டத்தில் நீடிப்பதாகக் குறிப்பிட்ட ஜெனரல் மெக்கன்சி, மேலும் தாக்குதல்களை தடுப்பதற்கு அமெரிக்கப் படை தலிபான்களுடன் இணைந்து செயற்படுவதாகவும், இது போன்ற பலதை தலிபான்கள் தடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் இந்தத் தாக்குதல் ஓகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு வெளியேற்ற நடவடிக்கைகளை எட்டுவதில் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது காபூல் விமானநிலையத்தில் 5,800 அமெரிக்க துருப்புகள் மற்றும் மேலும் 1,000 பிரிட்டன் துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுவரை ஆப்கானில் இருந்து 104,000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து சுமார் 5,000 பேர் விமானநிலையத்தில் காத்திருப்பதோடு மேலும் பலர் சோதனைகளை கடந்து விமானநிலைத்திற்குள் நுழைய முயன்று வருகின்றனர்.

கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகளும் ஏற்கனவே வெளியேற்ற நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளன.

கடந்த ஆறு ஆண்டுகளாக காபூல் விமானநிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கி வந்த துருக்கி அங்குள்ள தமது துருப்புகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

எனினும் தமது அரசின் மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்திய பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வெளியேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார்.

காபூல் விமான நிலையத்தில் இருந்து ஆட்களை வெளியேற்றும் பணியில் பிரிட்டிஷ் படையினர் கடைசி கட்டத்தை எட்டிவிட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாட்டினர் மற்றும் வெளியேற்றத்துக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டவர்கள், விமான நிலையத்தில் உள்ளவர்கள் தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தப்படும். புதிதாக யாரும் வெளியேற்றுவதற்காக அழைக்கப்படமாட்டார்கள்.

“(விரும்புகின்ற) எல்லோரையும் வெளியேற்ற முடியவில்லை என்ற வருத்தத்துடனே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வேலஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் பின்னர் அளித்த பேட்டி ஒன்றில், காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தங்கள் வெளியேறும் திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்திருந்தார்.

காபூல் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை