காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறில் மீது பைசல் காசிம் எம்.பி. ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்த உயரிய சபையில் முன்வைப்பது நாகரிகமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ நெருக்கடிகள், சதிகள்,பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் நவீன தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளமொன்றில் வெளிவந்த செய்தியை யார் பதிவிட்டார்,யார் பகிர்ந்தார் என்ற உண்மைத்தன்மையை ஆராயாது அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் மீது பைசல் ஹாசிம் எம்.பி. ஆதாரமற்ற குற்றச் சாட்டை இந்த உயரிய சபையில் முன்வைக்கின்றார். இது தவறு. நாகரீகமற்றது.
முஸ்லிம் மக்களுக்காக அவர்களின் உரிமைக்காக , ஜனாஸாக்களுக்காக நாம் போராடியுள்ளோம்.
நாம் துன்பப்பட்ட காலத்தில் எமக்காக முஸ்லிம் மக்கள், அரசியல்வாதிகள் போராடியதனை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்களுக்கு துன்பம் வந்தபோது நாம் போராடியுள்ளோம்.
எனவே சமூக வலைத்தளமொன்றில் வந்த விடயம் தொடர்பில் உண்மைத்தன்மையை ஆராயாமல், அதனை ஜெய சிறில் தான் வெளியிட்டாரா அல்லது வேறு யாரும் ஒருவர் வெளியிட்டதை பகிர்ந்தாரா என்பதனைக்கூட ஆராயாது குற்றச் சாட்டுக்களை இந்த உயரிய சபையில் வெளியிட வேண்டாமென பைசல் ஹாசிம் எம்.பி. யிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
from tkn