விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி மொரோக்கோ உடனான இராஜதந்திர உறவை அல்ஜீரியா துண்டித்துள்ளது.
மேற்கு சஹாரா விவகாரம் தொடர்பில் மொரோக்கோ மற்றும் அல்ஜீரியா இடையே பல தசாப்தங்களாக கசப்பான உறவு நீடித்து வருகிறது.
‘இன்றில் இருந்து மொரோக்கோ இராச்சியத்துடனான இராஜதந்திர உறவை துண்டிக்க அல்ஜீரியா தீர்மானித்துள்ளது’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரம்தான் லமம்ரா கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார்.
‘அல்ஜீரியாவுக்கு எதிராக விரோத செயற்பாடுகளை மொரோக்கோ இராச்சியம் ஒருபோதும் நிறுத்துவதாக இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு நாட்டு உறவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் துண்டிக்கப்பட்டபோதும் இரு நாடுகளிலுமான தூதரகங்கள் தொடர்ந்து திறந்திருக்கும் என்று லமம்ரா கூறினார்.
இது பற்றி மொரோக்கோ வெளியுறவு அமைச்சு உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. அல்ஜீரியாவுடனான உறவை மேம்படுத்த மொரோக்கோ மன்னர் ஆறாவது முஹமது அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அல்ஜீரிய ஆதரவு பொலிசாரியோ அமைப்பு மேற்கு சாஹாராவில் சுதந்திரத்திற்காக போராடி வருவதோடு அந்தப் பகுதி தமக்கு சொந்தமானது என்று மொரோக்கோ உரிமை கோருகிறது.
from tkn