கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வில் புதிய கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன
மாணவர்களினதும் பெற்றோர்களினதும் பாரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறந்த அறிவுத்திறனை எதிர்கால பரம்பரைக்கு பெற்றுக்கொடுப்பது கல்வியமைச்சின் பொறுப்பாகும் என புதிய கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய கல்வியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று கல்வியமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்ற பின் அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிவே மிகச்சிறந்த உயரிய சொத்தாகும்.
சமூகத்தில் ஏனைய சொத்துக்கள் அழிந்து போகலாம் அறிவு மட்டுமே என்றும் அழியாதது. அதுமட்டுமன்றி அறிவாற்றலானது தினம் தினம் புதுப்பிக்கப்படும். அதனால்தான் கல்வி அமைச்சுக்கு ஒரு உன்னதமான கௌரவம் உள்ளது.
டொனமூர் ஆளுநரின் காலத்தில் கல்விக்கு பெரும் தடைகள் ஏற்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில் அந்த அனைத்துத் தடைகளையும் வெற்றி கொண்டு சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா இலவசக் கல்வி சட்டத்தைக் கொண்டு வந்து ஒரே ஒரு வாக்கில் நிறைவேற்றினார். அன்று
நிறைவேற்றப்பட்ட அந்த சட்டம் மூலமே தற்போது புதிய புதிய வழிகள் மூலம் அறிவை பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
எமது நாட்டில் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டுச் செல்கின்றனர். அத்தகைய மாணவர்களை சமூகத்தில் பலமுள்ள பிரஜைகளாக உருவாக்குவதற்கு பட்டப்பின் கல்வி நிறுவனங்களை உருவாக்குவது அவசியமாகும் என்றும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் முன்னாள் கல்வியமைச்சர் களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பந்துல குணவர்தன சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்துகொண்டுள்ளதுடன் அங்கு உரையாற்றிய அமைச்சர் ஜி எல் பீரிஸ் கடந்த இரண்டு வருடங்களாக கல்வித்துறையில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாகவும் சவால்களை வெற்றிக்கொண்டு பயனுள்ள பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn