நீதியான தீர்வினை வழங்க பரிந்துரை

நாட்டின்  பொருளாதாரத்தை கருத்திற்கொண்டு அடுத்த வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க ஆலோசனை

அரசாங்கத்துக்கு அமைச்சரவை உப குழு சிபார்சு

 

ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நீதியான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு அதன் அறிக்கையில் அரசாங்கத்திற்கு பரிந்துரை  செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை கருத்திற்கொண்டு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் அதனை நடைமுறைபடுத்துவதற்கு பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றை இணைந்த சேவையாக கொண்டுவருவதற்கு அமைச்சரவை உப குழு தமது அறிக்கையில் யோசனைகளை முன் வைத்துள்ளது.

அதன் முதல் தீர்வாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவைகளை முறைமைப்படுத்துவதை எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்பதாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அக்குழு தமது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் அறிக்கை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் அடுத்த வாரம் அமைச்சரவையில் கலந்துரையாடலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும,விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 08/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை