தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள்,அதிகாரிகள்,கல்விசார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 சைனோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் நேற்று (30) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.அகிலனின் வழிநடத்தலின் கீழ், சுமார் 800 பேருக்கு சைனோபாம் தடுப்பூசிகள் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார்,சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச்.நபார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனடிப்படையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகம், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியப்பிரிவில் கொவிட் 19 சைனோபாம் தடுப்பூசிகள் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் இது வரையும் சுமார் 10800 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளன.அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் முதலானோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தடுப்பு ஊசி ஏற்றும் மையங்களாக ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலயம், பாலமுனை இப்னுஸீனா வித்தியாலயம், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலை,தீகவாபி வைத்தியசாலை ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகிறன.இதேவேளை இன்று சனிக்கிழமை (31) அட்டாளைச்சேனை, ஆலம்குளம் பொதுமக்களுக்கு கொவிட் 19 சைனோபாம் தடுப்பூசிகள் கரடிக்குளம் றஹ்மானியா வித்தியாலயத்தில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரையும் ஏற்றப்படவுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் அனைவரும் தவறவிடாது நேரகாலத்தோடு முன்வந்து தத்தமது வதிவிடத்திற்கு அருகிலுள்ள கொவிட் 19 சைனோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் மையங்களுக்குச் சென்று தமக்குரிய தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.அகிலன் இதன்போது கேட்டுக் கொண்டார்.
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)
from tkn