30 வயதுக்கு மேற்பட்டோருக்கு எந்த நிலையத்திலும் தடுப்பூசி

வசதிகளை ஏற்படுத்திக்ெகாடுக்குமாறு சுகாதார பிரிவுக்கு ஜனாதிபதி பணிப்பு

“எந்தவொரு நோயாளியும் அசௌகரியங்களுக்குள்ளாக இடமளிக்க வேண்டாம்”

“கடந்த மாதத்தில் மாத்திரம் 120 ஆர்ப்பாட்டங்கள்” நோய் பரவுவதற்கான காரணத்தை புலனாய்வுத்துறை தெரிவிப்பு

கொவிட் 19 நோய்த் தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியையும் அசௌகரியத்துக்குள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

கொவிட்19 நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட சில பிரதான நகரங்களிலுள்ள வைத்தியாசாலைகளுக்கு நாளாந்தம் வருகை தருகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு வருகை தருகின்ற நோயாளர்களின் நோய்த் தொற்றை உறுதி செய்துகொள்ளும் போது ஏற்படுகின்ற நெரிசல் காரணமாக, அவர்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகக் கூடாதென, ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சில பிரதான நகரங்களுக்கு அண்மையில், மேலதிக சிகிச்சை நிலையங்கள் பலவும், கடந்த மாதங்களுக்கு முன்னரே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

எந்தவோர் அவசர நிலையிலும் தொற்றாளர்கள் அசௌகரியங்களுக்கு ஆளாவதைத் தடுப்பதற்காகவே அந்நிலையங்கள்

தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நோய்த் தொற்று அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள், முதலாவதாக மேலதிக சிகிச்சை நிலையங்களுக்கும் பின்னர் நோயாளியின் நிலைமையை அவதானித்து வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைப்பதன் அவசியத்தையும், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி ஏற்றல் மற்றும் எதிர்காலச் செயற்றிட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடும் கொவிட்19 தடுப்பு விசேட குழுவுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் பொதுமக்கள் அசளகரியங்களுக்கு ஆளாவதைத் தடுப்பதற்கான பொறிமுறை ஒன்றைத் திட்டமிடுவதற்கு, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் நேரடியாகப் பங்களிப்புச் செய்யவேண்டுமென்றும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்கு அவசியமான வழிகாட்டல்களை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ந்தும் அறிவுறுத்தல்களை வழங்குவது, சுகாதார நிபுணர்களின் பொறுப்பாகுமென்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரண்டாவது தடுப்பூசியை வழங்குகின்ற எந்தவொரு மத்திய நிலையத்திலும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும், செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கக்கூடிய அளவுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. மூன்றாவது தடுப்பூசியை வழங்க வேண்டி ஏற்பட்டாலும், அதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது.

இருப்பினும், நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காகப் பொதுமக்கள் வழங்குகின்ற பங்களிப்பு குறைந்துள்ளமை கவலைக்குறியதாக உள்ளதென, விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதத்தில், நாடு முழுவதும் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், குறைந்தது 1,500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றாது இவ்வாறு பொது மக்கள் ஒன்றுகூடுவது, நாடு முழுவதும் வேகமாக கொவிட்19 நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகியுள்ளதென்று, புலனாய்வுத் துறையினர் சுட்டிக்காட்டினர்.

 

 

Sat, 08/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை